Pages

Friday, January 18, 2019

பறவையின் கீதம் - 98





விஷ்ணு தன் பக்தன் ஒருவனிடம் ஒரு நாள் சொன்னார் "இதோ பார், உன் முடிவே இல்லாத வேண்டுதல் எல்லாம் கேட்டு எனக்கு சலித்துவிட்டது. உனக்கு 3 வரம் கொடுக்கிறேன். வாங்கிக்கொள். பிறகு ஒரு வரமும் தர மாட்டேன்.”

பக்தனுக்கு படு சந்தோஷமாகிவிட்டது. அப்போதுதான் தன் மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு வந்திருந்தான். 'என் மனைவி சாகட்டும். நான் வேறு நல்ல பெண்னை திருமணம் செய்தி கொள்கிறேன்.' என்றான்.

ஆகட்டும் என்று சொல்லி விஷ்ணு மறைந்துவிட்டார்.

வீட்டுக்கு போனால் மனைவி இறந்து போயிருந்தாள். அக்கம் பக்கம் சுற்றத்தார் எல்லாரும் அவளுடைய நல்ல குணங்களை சொல்லி அழுதார்கள். இவனுக்கோ 'அட ஆமாம்! அவள் நல்லவள்தானே, இவளை விட நல்ல பெண் கிடைப்பாளா, அவசரப்பட்டுவிட்டோமே என்று தோன்றிவிட்டது. அவன் விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்தான் - 'இவள் உயிர் பிழைக்கட்டும்.' அவளும் தூக்கத்தில் இருந்து எழுபவள் போல எழுந்துவிட்டாள்.

இப்போது இன்னும் ஒரே ஒரு வரம்தான் பாக்கி இருந்தது. இதை வீணடிக்காமல் எதையாவது சரியாக கேட்டு வாங்கிவிட வேண்டும் என்று நினைத்தான். முன் போல தப்பாக கேட்டுவிட்டால் அதை சரி செய்ய இன்னோரு வரம் கிடைக்காதே? பலரையும் கலந்து ஆலோசித்ததில் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாக சொன்னார்கள். குழப்பமே மிஞ்சியது. சாவே வேண்டாம் என்று கேட்கலாமா? அட உடல்நலமில்லையானால் சாவே வராமல் இருந்து என்ன பிரயோஜனம்? அப்போ நல்ல ஆரோக்கியம்? அட, காசே இல்லாமல் நல்ல ஆரோக்கியம் இருந்து என்ன புண்ணியம்? அப்போ நிறைய பணம்? அட நண்பர்களே இல்லையானால் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

இப்படியே சில பல வருஷங்கள் சென்றன. குழப்பம் நீடித்துக்கொண்டே இருந்தது. கடைசியில் விஷ்ணுவையே கேட்டான் " நான் என்ன வரம் கேட்கட்டும்?”
பக்தனின் குழப்பத்தை கண்டு மனமிரங்கி அவர் சொன்னார் “என்ன கிடைத்தாலும் திருப்தியுடன் இருக்க வேண்டும் என்று கேள்!”

No comments: