Pages

Thursday, January 14, 2010

மாக புராணம் 18



18.முனிவர் பத்தினிக்கு கூறும் தத்துவம்:

முனிவர்: ப்ரியே! துக்கப்படுவதில் பயனென்ன? பிறந்தவர்க்கு இப்போதோ, நாள் சென்ற பின்னோ மரணம் என்பது நிச்சயம். பதிமூன்று வயதில் புத்ரன் இறந்தால் மற்றும் சில ஆண்டுகள் சென்றதும் நீயுமிறப்பாய். நானும் இறப்பேன். இறந்தவர் பிறப்பதும் [இறந்தவர் இறப்பதும் ஸஹஜந்தானே? காலத்தில் வரும் மரணத்தை யார் எப்படி தடுக்க முடியும்? வருவது வந்தே தீரும். அவரவர் செய்த கர்மாவிற்கேற்றபடி இளமையிலோ யௌவனத்திலோ கிழத்தன்மையிலோ மரணம் வரும். புண்ணியம் செய்தவர் புத்ர சோகத்தை அனுபவிக்கமாட்டார்.
ஸு2க்ல சுரோணித சேர்க்கையால் உண்டாகும் சரீரம் நித்யமல்ல. பஞ்ச பூதங்களால் ஆகி மல ஜலம் ரக்த மாம்ஸம் நிறைந்த இந்த உடலில் ஆசை வைக்கலாகாது. ஆசையே துக்கத்துக்கும் காரணம்.
இவ்வுடலில் நான் என்ற எண்ணம் உண்டாவதே சரியல்ல! நான் என்பது ஆத்ம வஸ்து! அது புலங்களுக்கும் உடலுக்கும் மனதிற்கும் மேலானது. மரணம் உடலுக்கே தவிர ஆத்மாவுக்கல்ல. ஆத்மா ஒரு போதும் அழியாத வஸ்து. இல்லற வாழ்க்கை இன்பம் தராது என வைராக்கியமுள்ள ஞானிகள் ஸம்ஸாரத்தில் ஈடுபடுவதில்லை. ஆத்ம ஞானமில்லாதவர்கள் ஸம்ஸாரம் சுகமென எண்ணுவர். இருட்டில் குருடன் கண் தெரியாமல் கஷ்டப்படுவது போல் மாயையால் மூடப்பட்ட அஞ்ஞானிகள் ஜநந மரணம் சோ2க மோஹம் இன்ப துன்பம் இவைகளை அனுபவிப்பர். கிடைக்கத்தகாத அரிய ஆறறிவு பெற்ற மானிட ஜன்மமெடுத்தவர் ச2ரீர அபிமானம் கொண்டு ஞானமின்றி ஜன்மாவை பாழாக்கக்கூடாது.
ஒரு பொருளிடம் பற்று கொண்டால் அதனால் ஆசை கோபம், அக்ஞானம், புத்தி, நாச2ம் முதலிய பற்பல துன்பங்கள் வரிசையாக வரும். ஆதலால் எதிலும் ஆசை கொள்ளாமல் சோ2க மோஹங்களை விட்டு நித்தியனான பகவானை உபாஸிப்போம்- பூஜிப்போம் எனக்கூறி கங்கா தீரஞ் சென்று ஸூர்ய மண்டலத்தில் நாராயணனை ஆவாஹநம் செய்து பூஜித்து துதித்தார் அந்த வேதியர்.

19. தாயின் தோஷம் தனயனுக்கு
முனிவர் மறுபடியும் பகவானை நாடிக் கடுந்தவம் புரிந்தார். பக்தி பரவசனான பரமன் அவரெதிரில் தோன்றி "வேண்டிய வரத்தை கேள்" என்றார்! முனிவர் "ஓ பகவன்! தாங்கள் தந்த தநயனுக்கு பன்னிரண்டே வயதென்று நாரதர் கூறியதால் எங்களுக்கு இன்பமளிக்க வேண்டிய குழந்தை துன்பத்தைத் தருகிறதே! அவன் சிரஞ்சீவியாக இருக்கும் படி அருள்புரிய வேண்டும்" என வேண்டினார். "மஹரிஷே! அவன் நீண்ட ஆயுளுடனிருப்பான்! முற்பிறவியில் அவனது தாய் செய்த பாபத்தால் ஸந்ததி இல்லாதிருந்து உமது தவத்தால் நான் சந்ததியை தந்தேன். அவள் செயலே குழந்தைக்கு பன்னிரண்டாண்டில் ஒரு கண்டமாக வந்தது. இது முதல் குழந்தையுடன் நீங்களும் மாகஸ்நாநம் செய்யுங்கள். கண்டம் அகன்று தீற்காயுஸ் பெறுவான்.

முற்பிறவியில் ஞானச2ர்மா என்னும் உமது மனைவி இவள். நீர் மாகஸ்நாநம் செய்து மனைவியையும் செய்யச்சொன்னீர். அவளதை செய்யவில்லை. அன்றியும் மாக பௌர்ணமியில் பாயஸான்னம் செய்வதின் மகிமையைக் கூறி அதைச் செய்யச்சொன்னீர். அவள் அதையும் செய்யவில்லை. இப்பிறவியிலும் உமக்கு அவளே பத்னியானாள். அவள் பாபத்தால் சந்ததி உண்டாகவில்லை. உமது மாகஸ்நாநத்தாலும் தபஸாலும் நான் உனக்கு ஸந்ததியைத் தந்தேன். இப்போதும் நீங்கள் மூவரும் மாகஸ்நாநம் செய்தால் உங்கள் குழந்தை கண்டம் நீங்கி சிரஞ்சீவியாக இருப்பான். மாக ஸ்நாந மஹிமையை ஒரு சிலரே அறிவர்!” எனக்கூறி மறைந்தார். முனிவரும் சந்தோஷத்துடன் வீடு வந்து சௌள, உபநயனம் முதலியன செய்து வேத சா2ஸ்திரங்களை கற்பித்தார். விடாமல் மூவரும் ஆண்டுதோறும் மாகஸ்நாநம் தானம் பூஜை மாகபுராண ச்2ரவணம் செய்து வந்தனர். அதனால் பதிமூன்றாமாண்டு வர வேண்டிய மிருத்யு அகன்றது. இச்சரிதம் கேட்டவரை அபமிருத்யு அடைய மாட்டார்.


No comments: