Pages

Friday, January 22, 2016

நான் யார்? -13



அப்படின்னா பக்தி செய்யறது எல்லாம் வேணாமா?

நம்மோட உள்ள்ள்ள்ள்ளே இருக்கிற சொரூபமேதான் கடவுள். யார் தன்னையே இந்த கடவுளுக்கு கொடுத்துவிடறானோ அவந்தான் மிகச்சிறந்த பக்திமான்! அதனால உள்ளே இருக்கிற ஆத்மா பத்திய சிந்தனைக்கு மட்டுமே இடம் கொடுத்து மத்த சிந்தனை எதுக்கும் இடம் கொடுக்காம ஆத்ம நிஷ்டையிலேயே இருக்கறதுதான் முழு அர்ப்பணிப்பு -சாக்ரிஃபைஸ்!

பின்னே நாம செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் யார் செய்வாங்க?

முன்னே சூரியனைப்பத்தி சொன்னா மாதிரி இயற்கையா எல்லாம் நடக்கும். ஒரு பரமேஸ்வர சக்தி அப்படி தன் முன்னிலையில் எல்லாம் தானாக நடக்க விதிச்சு இருக்கு. அப்படி இருக்கறப்ப எதுக்கு நாம இப்படி செய்யணும் அப்படி செய்யணும்ன்னு மண்டையை உடைச்சுக்கணும்? பரமேஸ்வரன் மேல பாரத்தை போட்டுட்டு சும்மா இருக்க கத்துக்கணும்.
ஒரு ட்ரெய்ன்ல போறோம். நம்ம தலை மேல ஒரு கனமான மூட்டையை வெச்சுகிட்டு போறோம். யாரும் என்னப்பா இதுன்னு கேட்டா நான் இந்த மூட்டையை தூக்கிகிட்டு போறேன்ன்னு சொன்னா எப்படி இருக்கும்? ட்ரெய்ந்தான் நம்மை சுமக்குது. நாம் மூட்டையை தூக்கி மேலே வெச்சுகிட்டா அதையும் சேத்து தூக்கிக்கும், மூட்டையை கீழே வைச்சாலும் வைக்காட்டாலும் மூட்டையை சுமக்கறது ட்ரெய்ந்தானே? அப்ப அதை நாம் ஏன் தலையில தூக்கி வெச்சுக்கணும்?

அது போலத்தான் எல்லா காரியங்களையும் அதே பரமேஸ்வர சக்தி நடத்தறபடி நடத்திகிட்டு போகட்டும்ன்னு விட்டுடணும். நாம நம்ம வாசனைப்படி இயங்கி நம்முடைய கர்மாவை தீர்த்துப்போம். புதுசா எதையாவது செஞ்சு கர்மாவை மேலும் சம்பாதிச்சுக்காம இருந்தாலே போதும்.

18. பக்தருள் மேலான பக்தர் யார்?
எவன் தன்னையே, கடவுளாகிய சொரூபத்தினிடத்தில் தியாகம் செய்கிறானோ அவனே சிறந்த பக்திமான். ஆத்ம சிந்தனையைத் தவிர வேறு சிந்தனை கிளம்புவதற்குச் சற்றுமிடங்கொடாமல் ஆத்ம நிஷ்டாபரனா யிருப்பதே தன்னை ஈசனுக் களிப்பதாகும்.
ஈசன்பேரில் எவ்வளவு பாரத்தைப் போட்டாலும், அவ்வளவையும் அவர் வகித்துக் கொள்ளுகிறார். சகல காரியங்களையும் ஒரு பரமேச்வர சக்தி நடத்திக் கொண்டிருக்கிறபடியால், நாமு மதற் கடங்கி யிராமல், 'இப்படிச் செய்ய வேண்டும் அப்படிச் செய்ய வேண்டு'மென்று சதா சிந்திப்பதேன்? புகை வண்டி சகல பாரங்களையும் தாங்கிக்கொண்டு போவது தெரிந்திருந்தும் அதிலேறிக் கொண்டு போகும் நாம் நம்முடைய சிறிய மூட்டையையும் அதிற் போட்டுவிட்டுச் சுகமா யிராமல், அதை நமது தலையிற் றாங்கிக் கொண்டு ஏன் கஷ்டப்பட வேண்டும்?


No comments: