Pages

Monday, April 11, 2016

டீக்கடை பெஞ்ச் கதைகள் - 8


அட! என்ன இந்த நேரத்துக்கு வறீங்க? வாங்க வாங்க!”
உறவினர்களில ஒத்தர் இறந்துட்டாரு. போய் வழி அனுப்பிட்டு வரேன்.”
ரொம்ப சோர்வா இருக்கீங்க?”
ஆமா. அதுக்குத்தான் மதிய நேரம் மணி ரெண்டானாலும் ஒரு டீ குடிக்கலாம்ன்னு….. காலையிலேந்து டாய்லெட்டே கதின்னு கிடந்தேன்.”
அட! என்னாச்சுங்க?”
காலை டிபன் சாப்பிட ஆரம்பிக்கறப்பத்தான் போன் வந்தது. போன் பேசிகிட்டே சாப்டு முடிச்சுட்டேன். ஆபீசுக்கு லீவு போட சில ஏற்பாடெல்லாம் செஞ்சுட்டு கிளம்பிகிட்டு இருந்தேன். அப்பத்தான் வயித்தை முறூக்கிகிட்டு… யப்பா! செம வலி. டாய்லெட்டுக்கு ஓடினேன். வயித்தாலை போச்சு. அப்பறமா இன்னும் ரெண்டு மூணு தரம். அப்பவே சோர்ந்து போயிட்டேன். பொண்டாட்டி சொல்றா, சாவு சேதி கேட்டுட்டும் சாப்டேனாம். அதனால குத்தம்ன்னு சொல்றா. அப்படிக்கூட உண்டானா?”
தெரிலீங்களே! நா கேள்விப்பட்டதில்ல.”
நமக்குத்தெரியாத விஷயம் உலகத்தில நிறைய இருக்கு!” குரலைக்கேட்டு திரும்பிப்பார்த்தான் இளைஞன். அதே பெரியவர்தான். சோர்வைத்தாண்டி கொஞ்சம் உற்சாகம் தொற்றிக்கொண்டது!
காசை கொடுத்து டீயை வாங்கிக்கொண்டவர் இளைஞன் அருகில் அமர்ந்தார்.
மாயா லோகம்ன்னு சொல்லுவாங்க இதை. ஆயிரத்தெட்டு என்ன கோடி சட்டதிட்டங்கள்… அதுல பலதும் நமக்குத்தெரியாது; பலதும் புரியாது. தெரிஞ்ச சிலதை வெச்சுகிட்டு நமக்கு எல்லாம் தெரியும்ன்னு நினைச்சுக்கிறோம்.”
உதாரணம் காட்டுங்களேன்!”
அதோ பார்!”
எதிர் சாரியில் இருந்த ஒரு வீட்டில் ஒருவர் வந்து மதில் சுவர் மேல் ஒரு உருண்டை சோறு வைத்துவிட்டு, காக்காக்காக்கா என்று குரல் கொடுத்துவிட்டு, ஓடி வந்த பூனையை விரட்டி விட்டு உள்ளே போனார்.
திதி கொடுக்கறார் போலிருக்கு. இதுல என்ன?”
ஆமாம். அப்பா, தாத்தா, தாத்தாவோட அப்பான்னு மூணு தலை முறைக்கு பிண்டம் வைப்பாங்க. வேடிக்கை பாரு!”
காகம் ஒன்று வந்து உட்கார்ந்தது. ஓரடி தூரத்தில் சோற்று உருண்டை இருந்தாலும் அதை கொத்தவில்லை. கா கா என கத்தியபடி இருந்தது. இரண்டு மூன்று நிமிடங்கள் சென்றன. இன்னும் கொத்தவில்லை. ம்ம்ம்ம் இப்படி ஆனா திதி கொடுத்தவர் ச்ரத்தையா கொடுக்கலைம்பாங்களே என்று நினைத்தான் இளஞன். அப்போது ஒரு காகம் பறந்து வந்து உடகார்ந்தது. சரி வந்தாச்சு என்று நினைத்தால் அதுவும் கா கா என்று கத்த ஆரம்பித்தது! இதென்னாடா இது? பசியே இல்லாத காக்காவா வருது என்று நினைத்தான், மெஸ்மரைஸ் ஆனது போல அந்த காட்சியை விட்டு வேறு எதையும் பார்க்கத்தோன்றவில்லை. இன்னும் ஐந்து நிமிடங்கள் சென்றன. உடல் முழுதும் கருமையான அண்டங்காக்காய் ஒன்று பறந்து வந்தது. உட்காரவில்லை. பறந்து கடக்கிற போக்கில் சட்டென்று ஒரு கொத்து கொத்திச்சென்றது. உடனே மற்ற இரு காகங்களும் கொத்த ஆரம்பித்தன! சாப்பிட்டு சில நாள் ஆனது போல விரைவாக உண்டன! பிரமிப்புடன் பார்த்து கொண்டு இருந்தான் இளைஞன். எந்த வரிசையில் சாப்பிட வேண்டும் என்று கூடவா விதி இருக்கும்?” ”ஏன் சார்” என்று திரும்பி பார்த்த போது பெஞ்சில் காலியான டீ க்ளாஸ் மட்டுமே இருந்தது!

No comments: