Pages

Tuesday, March 10, 2015

ரமணர் - அடியார்கள் -2 - கீரைப்பாட்டி




கீரைப்பாட்டி என்று ஒரு பாட்டி மலை மேலே இருந்தார். குகை நமசிவாயர் மண்டபத்தில் தங்கி இருந்தார். பகவான் கோவிலில் இருந்த போதே அவ்வப்போது வந்து தரிசித்து போவார். பகவான் விரூபாக்‌ஷ குகைக்கு வந்த பின் தினசரி ஏதேனும் கொண்டு வந்து சாப்பிட கொடுத்துச்செல்வார். அவரிடம் ஒரே ஒரு பானை உண்டு. குளிக்க வென்னீர் அதிலேதான். பிறகு சமையலும் அதிலேதான். பிக்‌ஷை எடுத்து கிடைக்கும் கொஞ்சம் நொய் அரிசி பருப்பு எல்லாவற்றையும் ஒன்றாக மூட்டை கட்டி வைத்திருப்பார். அதில் கொஞ்சம் எடுத்துப்போட்டு சோறாக்கி பகவானுக்கு கொண்டு வருவார். மலையில் அலைந்தால் தினசரி ஏதேனும் கீரை கிடைக்கும். அதையும் சமைத்து பகவானுக்கு கொடுப்பார். சாமிக்கு இது குளிர்ச்சி; சாமிக்கு இது கண்ணுக்கு நல்லது என்று சொல்லி சமைப்பார். என்றாவது ஒன்றும் காய்கறி கிடைக்காவிட்டால் வருந்துவார். அப்போது பகவான் மரத்தில் ஏறி புளியந்தளிர் பறித்து கொடுப்பார்; அதை சமைப்பார்.
இவ்வளவு செய்தாலும் தான் ஒன்றும் சாப்பிடுவதில்லை!

பின்னொரு காலத்தில் ஒரு இரவில் ஒரு திருடன் அவளது இடத்தில் திருட வந்தான் (அங்கே அவனுக்கு என்ன அகப்படும் என்று நினைத்தானோ!) யாரது என்று பாட்டி கேட்க அவன் அவளது கழுத்தை நெரித்து தள்ளினான். பாட்டிஅண்ணாமலை! அண்ணாமலை! திருடன்!என்று அலறினாள். பக்கத்தில் இருந்த விரூபாக்‌ஷ குகை, மாமர குகை, ஜடா ஸ்வாமி குகையில் இருந்த யாருக்கும் இது கேட்கவில்லை. அங்கிருந்து வெகு தூரத்தில் கண் மூடி இருந்த பகவான் காதில் கேட்டது. உடனே அவர் இதோ வந்துட்டேன் என்று எழுந்து கிளம்பினார். நடு இரவில் பகவான் எங்கோ செல்வதை பார்த்து பழனிச்சாமி உடன் வந்தார். இருவரும் கீரைப்பாட்டியின் இடத்துக்கு வந்து சேர்ந்தனர். “எங்கே திருடன்? யாரையும் காணோம்! எல்லாம் உன் ப்ரமைஎன்றனர்.
இல்லே சாமி! திருடன் வந்து சாமான்களை எடுக்கும் போதும் பாத்துட்டு ’யாருடா?’ என்றேன். அவன் என் கழுத்தை பிடித்து நெரித்தான். நான் கத்த அப்போ ’இதோ வந்துட்டேன்’ ந்னு குரல் கேட்டது. உடனே அவன் ஓடிட்டான்என்றாள்.

ஒரு தீப்பந்தம் கொளுத்தி பார்த்தால் அங்கே சிறு மூட்டைகள் சிதறிக்கிடந்தன. அப்போது அவள் சொல்வது உண்மை என நினைத்தார்கள்.

சிறிது காலத்தில் விதேகம் அடைந்த கீரைப்பாட்டி இப்போது ஆச்ரமத்தின் அருகே இருக்கும் தக்‌ஷிணா மூர்த்தி ஆலயத்தின் எதிரில் புளிய மரத்தடியில் அடக்கம் செய்யப்பட்டாள்.

No comments: