Pages

Wednesday, March 18, 2015

ரமணர் - அடியார்கள் - 4 -பழனிச்சாமி




பழனிச்சாமி பிள்ளையார் கோவிலில் சிரத்தையாக பூஜை செய்து வந்த சாது. திருவண்ணாமலை கோவிலில் ஒரு சிறுவன் சமாதி இருப்பதாக கேள்விப்பட்டு தரிசிக்கப்போனவருக்கு தந்தையாக மாற பொறுப்பு உள்ளிலிருந்து வந்தது. தன் உயிருள்ள வரை இந்த பாலகனை காப்பேன் என்று சங்கல்பம் செய்து கொண்டார். இந்த பாலகனோ வெளி உணர்வே இல்லாமல் இருந்ததால் வேடிக்கை பார்க்கவே பலர் வந்தனர். வந்தவர்கள் சும்மா இல்லாமல் பாலகனை உலுக்கிப்பார்ப்பார்கள்; பேசிப்பார்ப்பார்கள். பழனிச்சாமியின் முதல் வேலை இவர்களிடமிருந்து பாலகனை பாதுகாப்பதாயிற்று. பகவானைச்சுற்றி தடுப்பு அமைத்தார். பிக்‌ஷைக்கு வெளியே போனால் இந்த தடுப்பை பூட்டிவிட்டே போவார். பிக்‌ஷை வாங்கி வந்த உணவை கொஞ்சம் ஊட்டுவார். இப்படி சுமார் 18 மாதங்கள் பாதுகாத்து வந்தார். கந்தாஸ்ரமம் அமைக்கப்படும் வரை உடன் இருந்தார். வயோதிகத்தால் கந்தாஸ்ரமம் ஏற முடியாமல் விருபாக்‌ஷ குகைக்கே வந்துவிட்டார்.
ஒரு நாள் பகவான் கந்தாஸ்ரமத்தில் இருந்த போது விரூபாக்‌ஷ குகைக்கு மேலே ஒரு மயில் வித்தியாசமாக அகவியபடி பறந்து பறந்து அமர்ந்தது. இதை கவனித்த பகவான் பழனிச்சாமிக்கு அந்திமம் நெருங்கிடுத்து என்று சொல்லிய படி கீழே இறங்கினார். தகப்பன் போல கண்ணும் கருத்துமாய் தன்னை கவனித்தவரை மடியில் வைத்துக்கொண்டு கைகளை மார்பிலும் தலையிலுமாக வைத்து இறைவனிடம் சேர்த்தார்.

 

No comments: