Pages

Monday, March 23, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 5





ஸ்ரீ ரமண கீதையுடன் தொடர்புள்ள வைதர்பாவின் மறைவு குறித்து பகவானிடம் தெரிவிக்கப்பட்டது. விதேகத்துக்கு சில நாட்கள் முன் சன்னியாசம் வாங்கிக்கொண்டு மரணத்தறுவாயில் பத்மாசனமிட்டு நேராக அமர்ந்து பிரணவத்தை உச்சரித்தபடியே அமைதியாக அடங்கியதாக சொன்னார்கள்.
வழக்கமா யோகிகள் எல்லாம் அப்படித்தான் அடங்குவா. பக்குவமானவர்களுக்குத்தான் அப்படி. ஞானியோட கதை வேற. வாழ்க்கைக்கு எவ்வளவு உதாசீனமா இருக்கானோ அது போலவே சாவுக்கும் இருப்பான். தேகத்துக்கு தீர்க்க முடியாத வியாதி எதுவும் வந்து அழுது உருண்டு புரண்டாலும் அரற்றினாலும் எதனாலேயும் பாதிக்கப்படாதவன். அவனே ஞானி என்றார்.

நாராயண ஐயர் ஒரு நாள் தனிமையில் தன் ஆற்றாமையை பகவானிடம் வெளிப்படுத்தினார்.
பகவானே! எனக்கு வேதாந்தம் பிடிபடலே! க்ருஹஸ்தனா இருக்கிறதாலே என்னால உபாசனையும் பண்ண முடியலே. எனக்கு உங்களைத்தவிர வேற கதியில்லே. என்னை எப்படியாவது கரையேத்தி எனக்கு உண்மைக்கு வழி காட்டுங்கோ. நான் உண்மையை ஒத்துக்கறேன். என்னாலே நீங்க சொல்லற ஆத்ம விசாரம் பண்ணமுடியலே. என்னை கைவிட்டுடாதீங்கோ பகவானே!” என்று நொந்து அழுதார்.
பகவானிடம் கருணை ததும்பியது.
ஓய்! உமக்கு உள்ளது நாற்பது பாடமா தெரியுமா? இல்லைனாலும் பரவாயில்லே. ஒவ்வொரு பாடலா ஒவ்வொரு வரியா பாடம் பண்னும். அதை தினம் பாராயணம் பண்ணும்!
காலத்திலே வார்த்தை மறைஞ்சு உள்ளது ஒளிரும். பாம்பு சட்டையை உரிச்சுக்கொண்டு வர்ற மாதிரி ஞானம் வெளிப்படும். இதை மட்டும் செய்யும்; அது போதும் என்றார் பகவான்.

ராமசந்திர ஐயர் ஒரு முறை பகவனிடம் உரிமையுடன் பகவானே! என்னை உங்ககிட்டே ஈர்த்தது உங்களோட ஒளிவு மறைவு இல்லாத எளிமையான வாழ்க்கையோ, உங்களோட பக்தியோ, எல்லாரையும் கட்டிப்போடற மௌனமோ கூட இல்லை. உங்களோட நான் யார் விசாரம்தான் ரொம்ப அறிவு பூர்வமானது. அதுவே என்னை ஈர்த்தது.” என்றார். அவர் பெருமிதம் குரலில் தொனித்தது.
பகவான் சிரித்தார்.
மீனுக்கு தூண்டில் போடறவா தூண்டில்ல நல்ல புழுவா மாட்டறது மீனுக்கு பசிக்கறதுன்னு சாப்பாடு போடவா? மீனை சாப்பிடறதுக்குத்தான் ஓய்!” என்றார் பகவான்.

ஒரு முறை பகவானிடம் சாஸ்திர விற்பனர்கள் வந்து வேத வேதாந்த விசாரம் செய்து சந்தேகங்கள் கேட்டு தெளிந்தார்கள். பகவானும் அநாயாசமாக எல்லாவற்றையும் தெளிவு படுத்தினார்.
இதைக்கேட்ட அனைவரும் சுகமடைந்தனர். ஒருவரைத்தவிர.
சப்-ரெஜிஸ்திரார் நாராயண ஐயருக்கு மனக்கிலேசம் ஏற்பட்டது. அவர்களுடன் தன்னை ஒப்பிட்டு தனக்கு ஒன்றும் தெரியவில்லையே என்று துக்கித்தார்.
பண்டிதர்கள் விடை பெற்றுப்போனதும் பகவான் தற்காகவே கத்திருந்தாற்போல நாராயண ஐயரைப்பார்த்து என்ன? என்றார்.
பதிலுக்கு காத்திராமல் இது உமிதான் ஓய்! சாஸ்திரம் படிக்கிறது அதை பிழையில்லாம ஒப்பிக்கிறதும் பரமார்த்தத்துக்கு பிரயோசனப்படாது. உண்மையை உணர இதெல்லாம் தேவையில்லே. சாஸ்திரம் படிக்கிறதாலேயே உண்மையை உணர முடியாது. அது முக்தியைக்காட்டும். அதை அப்பியாசம் செய்யறதும் அது காட்டற வழியிலே போறதும்தான் அதுக்கு பிரயோஜனம். நீங்க கண்ணாடி பாத்து சவரம் பண்ணிப்பிங்களா?”
ஆமாம் என்றார் நாராயண ஐயர்.
கண்ணாடியை பாத்து உங்க முகத்துக்குக்குதானே சவரம் பண்ணுவீர்? இல்லே கண்ணாடில தெரியற முகத்துக்கு பண்ணுவீரா?
அது போலத்தான் வெறும் சாஸ்திர படிப்பும் அதை விஸ்தாரமா பேசறதும் கண்ணாடில தெரியற முகத்துக்கு சவரம் செய்யறது போல.” என்றார் பகவான்.

No comments: