Pages

Tuesday, March 24, 2015

ரமணர் - அடியார்கள் - 6 -ஜகதீச சாஸ்த்ரி




ஜகதீச சாஸ்த்ரி ஒரு முறை விரூபாக்‌ஷ குகையில் இருந்த பகவானை தரிசிக்க வந்தார். அப்போது எல்லாரும் ஆன்மீக விஷயங்களை சுவாரசியமாக பேசிக்கொண்டு இருந்ததால் நள்ளிரவு ஆகிவிட்டது. டவுனுக்குப் போகத்திரும்பிய ஜகதீசருக்கு தூக்கம் தள்ள அப்படியே குகைக்கு வெளியே படுத்துவிட்டார். வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தமையால் அது ஆபத்தான முடிவு!

இரண்டு மணி அளவில் பகவான் வெளியே வந்து ஜகதீசர் மூக்கில் கொஞ்சம் மூக்குப்பொடியை வைத்துவிட்டார். திடுக்கிட்டு எழுந்த சாஸ்திரி அடக்கமுடியாமல் தும்ம ஆரம்பித்தார். பகவான் மலை அதிர சிரித்தார் பின் ஜகதீசா உள்ளே வந்து படுஎன்றார். சாஸ்திரியும் தூக்கக்கலக்கத்தோடேயே என்ன நடந்தது என்றே தெரியாமல் உள்ளே வந்து படுத்துக்கொண்டார்.

ஜகதீசன் பலாக்கொத்தில் இருந்து கொண்டு சாதனை செய்து வந்தார். எப்போதும் மன எழுச்சி இல்லாமலே இருந்தார். தன் கண் முன் குரங்குகள் அவருடைய உணவை எடுத்துச்சென்றாலும் சும்மா பார்த்துக்கொண்டு இருப்பார். யாரும் விரட்டுவதுதானே என்று கேட்டால் விரட்ட மனம் எழவில்லை என்பார்.
அவர் மனதில் தன் ஹ்ருதயத்தில் க்ருஷ்ணர் வாசம் இருப்பதாக ஒரு பலமான பாவனை! அதனால் நடக்கும் போது கூட ஒரு பக்கமாக சாய்ந்து நடப்பார். க்ருஷ்ணருக்கு வலிக்குமாம்!
பகவானுக்கு இது தெரிய வந்தபோது பாவம் ஜகதீசன்! நெஞ்சில க்ருஷ்ணரை வெச்சுண்டு எப்படித்தான் மூச்சு விடறானோ! இறைவன் நம் ஹ்ருதயத்திலே இருக்கிறதா பாவிக்கறது நல்லதுதான். அதுக்காக உருவத்தோட கை, கால் கூட நீட்டிண்டு இருக்கான்னு நினைக்கிறது அபத்தம். கிருஷ்ணர் என்ன உடம்பா? உருவமிருக்கா?” என்றார்.
ஆச்சரியமாக பகவான் இப்படி பேசிய மாத்திரத்தில் ஜகதீசன் இயல்பு நிலைக்குத் திரும்பினார். குரங்குகளை விரட்டினார்!


ஒரு நாள் மதியம் பகவான் தன் கமண்டலத்தை எடுத்துக்கொண்டு ஜெகதீசா! மலைக்குப்போகலாம் வா என்றார்.
இந்த வெய்யிலேயா? பகவானே என்னால் முடியாது!” என்றார் ஜகதீச சாஸ்திரி.
நான் நடக்கிற பாதையிலேயே நீயும் நட! போகலாம் வா!”
பகவானே! நீங்க வேற! உங்களாலே முடியும். என்னால முடியாது பகவானே!”
ஏன்? நானும் உன்னை மாதிரி ரெண்டு காலாலேதானே நடக்கறேன்? ஒண்ணும் ஆகாது வா,போகலாம்! ”
இனி தப்பிக்க முடியாது என்று புரிந்து கொண்ட சாஸ்த்ரி பகவானுடன் நடக்க ஆரம்பித்தார். பாறைகள் கால்களை பொசுக்கின. கொஞ்சம் தூரம் போகும் போதே தாங்கவில்லை.
பகவானே! இனிமே என்னால முடியாது. ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. நிக்கறதே சிரமமா இருக்கு! மலை அனல் கக்கறது பகவானே! ”
ஒன்றுமே நடக்காதது போல சும்மா பயப்படாதே, வா என்றார் பகவான்.
இப்படியே சித்தே நின்னா தலை வெடிச்சுடும். செத்தே போயிடுவேன்என்று உண்மையாகவே கூறினார் ஜகதீசர்.
ஜகதீசா நல்லா கேளு! பயப்படாதே! நீதான் சூரியன் என்கற பாவனை வரணும். அஹம் சூர்யாஸ்மி ந்னு ஜபம் பண்ணு. நீதான் சூரியன் என்கிற திடம் வரணும். அப்புறம் நீயே சூர்ய சொரூபமா இருப்பே! சூரியனோட அம்சம் அப்படியே வந்துடும். அப்புறம் எப்படி உஷ்ணம் தாக்கும்? ”
சாஸ்த்ரி அப்படியே ஜபிக்க ஆரம்பித்தார். சிறிது நேரத்திலேயே மாற்றம் தெரிந்தது. சூடு தெரியவில்லை. மாறாக குளிர்சியாகவே இருந்தது.
பகவானுக்கு ஈடாக வேகமாகவே நடந்தார். ஸ்கந்தாஸ்ரமத்தை அடைந்த போது கால் சுடவே இல்லை!

 

No comments: