Pages

Monday, April 6, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 9


ஒரு முறை ஆசிரமத்தில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு விட்டது. தங்கியிருந்த பக்தர்களிடம்  “அன்றைய இரவு உணவுடன் உக்கிராணம் காலி; அடுத்த நாளைய காலை உணவை தாங்களே பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று பணிவுடன் சொல்லப்பட்டது.
சிலர் ஊருக்குத் திரும்ப முடிவு செய்து பகவானிடம் உத்திரவு கேட்கச்சென்ற போது இது பகவான் கவனத்துக்கு வந்தது.
காக்கை குருவிக்கு எல்லாம் ஏது ஓய் உக்கிராணம்? இந்த மலை இருக்கு! எல்லாரும் பேசாம போய் தூங்குங்கோஎன்றார். மௌனமானார்.

அடுத்த நாள் காலை வழக்கம் போல அதிகாலையில் பகவான் சமையலறைக்குள் நுழைந்தார். “என்ன இருக்கு?” என்று கேட்டார்.
கொஞ்சம் போல நொய் குறுணைதான் இருக்குஎன்றி பதில் வந்தது.
சரி, கொண்டு வாஎன்றவர் அடுப்பை மூட்டி பாத்திரத்தை அதில் ஏற்றினார். இருந்த கைப்பிடி குருணையை சுத்தம் செய்ய ஆரம்பித்தார். உலை கொதித்ததும் அதில் போட்டார். பக்கத்தில் இருந்த அண்ணாமலை இது என் ஒருவனுக்கே பத்தாது! எவ்வளவு பேர் சாப்பிட முடியும்?’ என்று நினைத்தார். அப்போது ஒரு பக்தர் இரண்டு லிட்டர் அளவு பாலுடன் வந்தார். அதுவும் சேர்க்கப்பட்டது. இன்னும் சில நிமிடங்களில் இன்னொரு பக்தர் கற்கண்டு உலர்ந்த திராட்சையுடன் வந்தார், அதுவும் சுத்தம் செய்யப்பட்டு சேர்ந்தது. ஆறரை மணி அளவில் இது தயார் ஆயிற்று. கும்பகோணத்தில் இருந்து சில பக்தர்கள் வந்து சேர்ந்தனர். அவர்கள் பெரிய பானை ஒன்றில் நிறைய இட்லி, வடை, சட்டினி, மலை வாழை, தொன்னை ஆகியவற்றை கொண்டு வந்தனர்.

பகவான் வழக்கம் போல ஏழு மணிக்கு குளித்து வந்தவுடன் எல்லோரும் அமர்ந்து திருப்தியாக உண்டனர். பகவான் தயாரித்த பாயசம் தொன்னையில் பறிமாறப்பட்டது. அப்போதுதான் வந்தவர்களுக்கே ஏன் தொன்னை கொண்டு வந்தார்கள் என்று புரிந்தது!


No comments: