Pages

Tuesday, July 7, 2009

ஞானத்தீயாலே பாபங்கள் அழியுமா?




சாத்திரங்கள் எப்பவும் உண்மையைதானே சொல்லும்? ஒத்தர் செஞ்ச கர்மாவெல்லாம் அனுபவிச்சே தீரணும்ன்னு சொல்லி இருக்கே! இல்லாட்டா ஒழியாதாமே! அப்புறமா மறுபடி பல ஜன்மங்களிலே செஞ்ச பாபம் எல்லாம் ஞானத்தீயால சுட்டு எரிக்கப்படும்ன்னு சொல்லி இருக்கு. இந்த ரெண்டிலே எது உண்மை?

49
கிரம சிருஷ்டியான சீவ ஈஸ்வர ஜகத்தைப் பற்றிய விவரங்கள் அறிஞனது பிராரத்துவம் என அறிந்து சீடன், அதற்கு வித்தாக உபகற்ப சிருட்டியால் அமைந்து கிடங்கும் சஞ்சிதத்தை அழிக்கும் பொருட்டு அது நசிக்குமென சுருதியில் கூறிய இரண்டு வகையில் எது உண்மை என வினாவுதல்:

கைத வங்களைச் சாத்திரஞ் சொல்லுமோ கருணையா லெனையாளும்
ஐய னேகுரு வேயெவரா கிலுமநுபவித் தாலன்றிச்
செய்த கர்மங்கள் விடாவென்ற வசனமுஞ் சென்மசஞ் சிதம்வேவத்
துய்ய ஞானத்தீ ச்சுடுமென்ற வசனமுந் துணிவதெப் படிநானே

கைதவங்களை(பொய்களை) சாத்திரஞ் சொல்லுமோ? கருணையால் எனை ஆளும் ஐயனே! குருவே! எவராகிலும் அநுபவித்தால் அன்றிச் செய்த கர்மங்கள் விடா என்ற வசனமும், சென்ம சஞ்சிதம் வேவ (வேக) துய்ய (மேலான) ஞானத்தீ சுடும் என்ற வசனமும் துணிவது (நிர்ணயிப்பது) எப்படி நானே?
~~
சாத்திரங்கள் பொய் சொல்லா அல்லவா? ஆனால் "எவராகிலும் அநுபவித்தால் அன்றிச் செய்த கர்மங்கள் விடா" என்று சொல்லிய பின், பிறப்பு முதல் வரும் சஞ்சித கர்மாவை மேலான ஞானத்தீ நீக்கும் என்பது எவ்வாறு?

அந்தக்கரணங்கள் பலதா இருக்கு. அதனால ஜீவன்களும் பலதா இருக்கு. இந்த அந்தக்கரணங்களோட செய்கைகளும் பலவிதமா இருக்கு. அதையெல்லாம் வகைப்படுத்தலாம். சிலது நல்ல காரியங்கள். அதிலே சந்தேகமே இருக்காது. அதே போல சிலது கெட்ட காரியங்கள். பல காரியங்களில நல்லதும் கெட்டது கலந்து இருக்கும். அது சிலருக்கு நல்லதாவும் சிலருக்கு கெட்டதாவும் இருக்கலாம். இல்லை ஒத்தருக்கே கலப்பட பலனை தரலாம்.இதைப்போல ஜீவன்களோட செய்கைகளும் அளவில்லாதவை.

எப்படி ஒரு மரத்திலே மொக்கு தோன்றி பூவாகி, பிஞ்சாகி, காயாகி, பழமாகுமோ அது போல வேதமும் அதிகாரிக்கு தகுந்த படி கர்ம காண்டம், உபாசனை காண்டம், ஞான காண்டம்ன்னு மூணு வித காண்டங்களாலே பூர்வ பட்சத்தையும் சித்தாந்தத்தையும் சொல்லும். பாபம் செய்யறவங்க அடைகிற நரகங்கள் நிச்சயமா இருக்குன்னு சொல்கிற சாத்திரங்களேதான் அதுக்கெல்லாம் போக்க/குறைக்க தானம், மந்திரம், விரதம், யக்ஞம் ன்னு பிராயச்சித்தங்கள் இருக்குன்னு சொல்லும். அது போலத்தான் முதல்லே பாபம் புண்ணியம் எல்லாம் அனுபவிச்சு தீரணும்ன்னு சொன்னாலும் அப்புறமா பிராரத்த கர்மா தவிர மத்தது எல்லாம் ஞானத்தீயாலே ஒழியும்ன்னு சொல்கிறது சத்தியம்.

ஏன் அப்படி சொல்கிறீங்கன்னா,
முதலிலே செஞ்ச கர்மத்தை அனுபவிச்சே தீரணும்ன்னு சொன்னது கர்ம காண்டத்திலே. இது சாதாரணமான நமக்கு சொன்னது. ஞான காண்டத்திலே ஞானத்தீயாலே பாபங்கள் அழியும்ன்னு சொன்னது தீவிர சாதகர்களுக்கு.
இப்படி உபதேசம் எப்பவும் அதிகாரி பேதத்தை அறிஞ்சு கொண்டு செய்ய வேண்டியது.

No comments: