Pages

Thursday, July 30, 2009

தியானம் பொய் எனில் அதனாலுண்டாகும் ஞானம் பொய்யா?



84.
தியானம் பொய் எனில் அதனாலுண்டாகும் ஞானம் பொய்யா?

சருவ முத்தியைத் தருகின்ற தியானமுஞ் சத்திய மன்றென்றால்
சருவ முத்தியுஞ் சத்திய மன்றென்று சங்கியாதே நீகேள்
உருவங் கேட்டவன் றியானிக்கும் பொழுதிலவ் வுருவம்வாஸ் தவமன்றே
உருவ மாகுமப் பொழுது கண்ணாற் கண்ட வுருவம்வாஸ் தவமாமே

சருவ (ஸர்வ) முத்தியைத் தருகின்ற (பிரம) தியானமும் சத்தியம் அன்று என்றால், சருவ முத்தியும் சத்தியமன்று என்று சங்கியாதே. (சந்தேகம் கொள்ளாதே) நீ (சமாதானத்தை) கேள், உருவங் கேட்டவன் தியானிக்கும் பொழுதில் (பாவனையாகையால்) அவ்வுருவம் வாஸ்தவம் அன்றே. [பாவனா திடத்தால்] அந்த உருவமாகும் அப்பொழுது (உருவமே தானாகும் போது) கண்ணாற் கண்ட உருவம் வாஸ்தவமாமே.
--
குரு உபதேசத்தால் பிரம்ம உபாசனை செய்யும்போது, அச்சமயம் இவன் உபாசனை பாவனையே. அதனால் அது பொய்யாகும். பிறகு அந்த உபாசனை திடப்பட்டு அதுவே தானாகும் போது அப்பிரம்ம சொரூபம் உண்மையேயாகும். திருட்டாந்தமாக யானையை காணாத ஒருவனுக்கு அதைக் கண்ட ஒருவன் யானையைப்போல ஒரு உருவம் எழுதிக்காட்டுகிறான். அதைப்பார்த்த அந்த மனிதன் அதைப்போலவே பாவனை செய்கிறான். அப்படி செய்யும் பாவனையில் தோன்றுகிற யானை பொய்யே ஆகும். ஆனால் மறுநாள் அவன் வீதியில் வரும் யானையை கண்டு தான் செய்த பாவனைப்பழக்கத்தால் இதுவே யானை என்று உணர்ந்து சந்தோஷப்படுகிறான். அப்போது அவன் பிரத்யக்ஷமாக கண்ணால் கண்ட யானை சத்தியமானதேயாகும்.

முன்னமேயே பாத்து இருக்கோம் - கடைசி காலத்தில எதை நினைக்கிறாங்களோ அதுவாகவே பிறப்பாங்கன்னு. அதுக்காகத்தான் யாரும் இறந்து போற நிலையில இருந்தா அவரை சுத்தி இருக்கிறவங்க நாம ஜபம் செய்வாங்க. அப்பவாவது இறைவன் நினைப்பு வந்து அவரோட ஒன்றி போகட்டுமேன்னு. ஹும்! இருந்தாலும் அந்த கடைசி தறுவாயில அப்படி நினைப்பு வர கொடுப்பினை இருக்கணும்.
பிரம்ம தியானத்தில உயிரை விட்டா என்ன விளைவுன்னு சொல்ல வேணாம் இல்லையா?

யாதொன்று பாவிக்க நான்
அதுவாத லாலுன்னை நானென்று பாவிக்கின்
அத்துவித மார்க்க முறலாம்
எதுபா வித்திடினு மதுவாகி வந்தருள் செய்
யெந்தைநீ குறையு முண்டோ
இகபர மிரண்டினிலு முயிரினுக் குயிராகி
யெங்குநிறை கின்ற பொருளே
-தாயுமானவர்

இந்த வுடலம் விடும்பொழுது
யாவன் யாதொன் றினைநினைத்த
னந்த வளவே யந்தப்பா
வனையா லதனை யடையுமா
லென்ற னியல்பே யெப்பொழுது
மிதயத் திடைகொண் டென்பாலாஞ்
சிந்தை யொடும்வா ளமர்தொடங்கி
லதனா லெனையே சேருதியால்.
-கீதை
கொஞ்சம் பிரச்சினை இருக்கு இல்லே? பிரிச்சு பாக்கலாம்.

இந்த உடலம் விடும்பொழுது யாவன் யாது ஒன்றினை நினைத்தன், அந்த அளவே அந்தப் பாவனையால் அதனை அடையுமால் என்றன் இயல்பே, எப்பொழுதும் இதயத்திடை கொண்டு, என்பாலாம் சிந்தையொடும், வாள் அமர் தொடங்கில் (கத்திச்சண்டை இல்லைங்க; வாளாவிருந்தான்= சும்மா இருந்தான் மாதிரி; சும்மா இருக்கத்தொடங்கினால்) அதனால் எனயே சேருதியால்.


3 comments:

sury siva said...

//அப்படி செய்யும் பாவனையில் தோன்றுகிற யானை பொய்யே ஆகும்.//
!!

//குரு உபதேசத்தால் பிரம்ம உபாசனை செய்யும்போது, அச்சமயம் இவன் உபாசனை பாவனையே. அதனால் அது பொய்யாகும்// !!!!

மேற்கொண்டு விளக்கமளித்தால் நல்லது.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

திவாண்ணா said...

ஐயா நீங்க நிச்சயமா அனுபவிச்சு இருப்பீங்களே. நாம் பாடு பட்டு ஒரு விஷயத்தை விளக்கறோம். கடேசில பாத்து ஒவ்வொத்தர் வேற மாதிரி புரிஞ்சு கொண்டு இருப்பாங்க.(கோழிக்குஞ்சு ஒண்ணை வரைய வரிசையா இத்தனை செ.மீ விட்டம் உள்ள வட்டம் ஒண்ணு வரைங்க.. ரீதியிலே கட்டளை கொடுத்து கடைசியிலே ஒவ்வொத்தரும் வரைஞ்சதை பாத்தா தமாஷா இருக்கும். இது உங்களுக்கு பழக்கமானதுதானே?) நிறைய முறை ஒரு மாதிரிதான் புரியுமே தவிர அனுபவப்படுகிற வரை அது சரியா புரியாது.
பிரம்மம் இன்னது ன்னு சொல்ல முடியாதது. அதை ஒரு மாதிரி புரியவைக்க முயற்சி செய்கிறாங்க. அதை அனுபவிக்கும் வரை அதை சரியா புரிஞ்சுக்க முடியாது.

திவாண்ணா said...

ஒரு நண்பரிடமிருந்து வந்த மடல்....
//ஜி!

இந்த பாடல்களில் உள்ள பொருள் எல்லாம் பொதுவான விளக்கத்தில் வராது. பிரம்மோபாஸனையின் போது ஏற்படும் பிரச்சனைகளுக்குரிய விளக்கங்கள் இவை.

சத் அசத் சதசத் எனும் முன்றை உடைத்து தாண்டிச் செல்லும் கட்டம் இது. பொதுவான விளக்கம் அடிப்படை சாதனைகளுக்கும், நியமங்களுக்கும், நித்திய கர்மாக்களுக்கும் எதிராக திருப்பி குழப்பி விட்டு விடும்.

உத்தர மீமாஸம் பூர்வ மீமாம்ஸத்தை அசக்கி விட்டு விடும். ஞான காண்டம் கர்ம காண்டத்தில் சங்கையை கிளப்பி விட்டு விடும். எப்படி வளர்ந்த பிறகு தாய்ப்பாலை ஒருவன் அருந்த நினைத்தால் அது மட்டமோ அப்படி ஞானத்தில் நுழையும்போது கர்மாக்கள் உதறப்படுகின்றன.

ஆனால் அதற்கென்று சிசுவிற்கு தாய்ப்பால் கூடாது என தடுப்பது ஆபத்தாகி விடும்.

நிலையை பொறுத்து ஞானமும், கர்மமும் பெரியோர்களால் prescribe செய்யப்படுகின்றன.....
//