Pages

Friday, May 1, 2015

ரமணர்- அடியார்கள் - சாது நடனானந்தர் -2


பகவான் விதேகமான பிறகு பக்தர்கள் குழாம் சிதறியது. எல்லோரையும் மீண்டும் ஆசிரமத்தில் சேர்ப்பிக்க முயற்சி நடந்து வெற்றி பெற்றது. ஆனால் நடனானந்தரை மட்டும் காணவில்லை! அந்த அளவுக்கு வெளியே தெரியாமலே ஒரு பக்தர் வீட்டில் தங்கி இருந்தார். ’மவுண்டன் பாத்’ இதழுக்காக கடைசி நாட்களில் பகவானுடன் பேசியவர்களிடம் விஷயங்களை சேர்த்துக்கொண்டு இருந்தார்கள். இவரிடம் விஷயம் சேர்க்க சென்ற கணேசன் அவர்களிடம் அபூர்வமாக வாய் திறந்தார்.

பகவானிடம் நான் ஒண்ணுமே கேக்கலே, பாகவானை பாக்கலே என்று சொல்லிக்கொண்டு இருந்தவர் ஏனோ கடைசியாக இது பத்திரிகைக்கு பிரயோசனப்படாது; தனிப்பட்ட முறையில உனக்கு பயன்படுமான்னு பாரு என்று சொல்லி தன் கடைசி சந்திப்பு பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
அப்போ 1948 கடைசியோ 49 ஆரம்பமோ இருக்கலாம். நாப்பதுகளிலேயே பகவானைப்பார்க்க கூட்டம் அதிகம்தான். தனியா பேச நேரமே கிடைக்காது. கட்டுப்பாடுகளும் அதிகமா போச்சு.

1920 ல ஆரம்பிச்ச சாதனை ரொம்பவே தீவிரமான சாதனை. வருஷம் ஆக ஆக முன்னேற்றம் இருந்தா மாதிரித்தான் இருந்தது. ஆனா இலக்கை அடையலே. எவ்வளோ தீவிரம் காட்டியும் முன்னேற்றினா மாதிரி இருந்தாலும் திருப்தி இல்லே.
இலக்கு கண்ணுக்கு தெரியற மாதிரி இருக்கு; ஆனா ஸ்திரமா இல்லை. கொஞ்சம் கொஞ்சமா சோர்வு ஏற்பட்டது. இடைவிட்டு விட்டு சாதனை... பின் சோர்வு... இருபத்தியெட்டு வருஷ சாதனையில கலக்கமும் சோர்வுமே மிச்சம்! உசிர விட்டுடுடலாமான்னு கூட தோணும்.
இது பிரம்மாவுக்கு விஷ்ணுவுக்கும் அடிமுடியை காணப்போய் ஏற்பட்ட சோர்வுன்னு அப்ப புரியலை. அப்படி இருந்தப்ப ஒரு நாள் என்ன புண்ணியம் செஞ்சேனோ ஹால்ல பகவான் தனியா இருந்தார்.
எத்தனையோ சந்தேகங்களை பகவான்கிட்டே கேட்டு இருக்கேன். அத்தனையும் புத்தி பூர்வமானதுதான். இப்ப கேட்ட சந்தேகம் நானேதான்.
இத்தனை வருஷத்திலே சாதனை கொடுத்தது இப்ப இந்த கேள்வியை கேக்க தைரியம்தான். வேற ஒண்ணுமே இல்லே!
அதை கேட்டப்ப பிறந்தது முதல் அதுவரை பட்ட கஷ்டங்கள் எல்லாம் சேர்ந்து நான் ஆகி இருந்தது.
பகவான் சோபாவில சாய்ஞ்சு மௌனமா இருந்தது.
பகவானே நான் என்ன நிலையில இருக்கேன்?
நீங்க காட்டின அடையாளத்துக்கு இன்னும் எவ்வளவு காலம் சாதனை பண்ணனும் பகவானே? ந்னு உயிர்லேந்து அழுதேன். பகவான் மௌனமாவே இருந்தது.
இப்ப என் வேதனை எல்லாம் கோபமாச்சு. இதுக்கு முன்னாடி யாராவது என்னை மாதிரி சாதனை செஞ்சு அந்த நிலையை அடைஞ்சு இருக்காங்களா? ந்னு கோபமும் வேதனையுமா அழுதேன்.
இந்த கேள்வியை கேட்டதும் எல்லாம் அடங்கிடுத்து!
அழுகை கோபம் வேதனை எல்லாம் வெளியே வந்துடுத்து. கதி அத்து நின்னேன், செத்துக் கிடந்தேன்.
பகவான் நிமிர்ந்து பத்மாசனம் போட்டு உக்காந்தது.
காலத்துலே யாரும் அதை அடையலே ந்னு அமிர்தத்தை உமிழ்ந்தது. சாவிலதான் அமிர்தம் தெரியும்! அடுத்த கைவல்ய நவநீதத்துலேந்து பாட்டை சொல்லித்து
தூல சூக்கும அஞ்ஞானம் 
 தோன்றும் மூன்று அவத்தை தாமும்
காலமோர் மூன்றும் சன்மக்
 கடல் எழும் கல்லோலங்கள்
போலவே வந்து வந்து
 போன எத்தனை என்பேன் நான்
ஆலமர் கடவுளாணை
 
 அவைக்கெல்லாம் சாட்சி நீயே. ’

அப்படின்னு கம்பீரமா சொல்லித்து. அப்போ முடிஞ்சது என் சாதனை! நான் செத்துப்பிழைச்சேன்!!
 

No comments: