Pages

Wednesday, June 4, 2014

உணர்வு சார் நுண்ணறிவு 6 - கோபம் 2




விதி விலக்கா சில விஷயங்கள் தவிர உணர்ச்சி வசப்பட்டு செய்கிற எந்த செயலும் சரியான விளைவை தராது
----------
இப்படி அடிக்கடி கோபப்படுகிறவங்க நிறைய தடவை ஒரு முடிவு எடுப்பாங்க! நான் இனிமே கோபப்பட மாட்டேன். ஆனாலும் அவர் வேலையில ஈடுபடும் போது நடக்கிற முதல் விஷயமே அவர் எதிர்பார்க்கிறா மாதிரி நடக்காம போகும் போது….

தன் கற்பனைப்படி தப்பா நடக்கிற விஷயம் கண்ணில் பட்டவுடனேயே சிக்னல் மூளைக்கு போகும். போன பதிவுல பார்த்தோம் இல்லையா? இது நியோ கார்டக்ஸுக்கு போகு முன் அமிக்டலாவுக்குப்போகும். அது முன்னேயே பதிவு செய்து வைத்திருக்கிற விஷயங்களை ஆராய்ஞ்சு பாத்து இதுக்கு இப்படித்தான் எதிர்வினை இருக்கணும்ன்னு முடிவெடுத்து செயலாக்க ஆரம்பிச்சுடும். நியோ கார்டெக்ஸ் கவனத்துக்கு இது போய் அது என்ன ஆச்சுன்னு பார்க்கறதுக்குள்ள எதிர்வினை துவங்கி இருக்கும்! இந்த நியோ கார்டக்ஸ் முழிச்சிகிட்டு “அடடா கோபப்படக்கூடாதுன்னு முடிவு பண்ணோம்மே” ந்னு யோசிச்சு பார்க்கிறப்ப கோபம் எல்லையை மீறி இருக்கலாம்! இல்லை ஒரு வேளை எல்ல மீறாம இருந்துதுன்னா கோபம் அடக்கப்படலாம்

அதாவது ரிப்லக்ஸ் சீக்கிரமா வேலை செய்யும். புத்தி கொஞ்சம் தாமதமா வேலைக்கு வரும். ஹும்! மந்த புத்தி என்கிறது இதான் போலிருக்கு.

மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறது என்னன்னா இது காலங்காலமா பரிணாம வளர்ச்சில வந்த விஷயம். மிருகங்கள் சட்டுன்னு தன்னை காப்பாத்திக்கொள்ள இப்படி ஒரு ரிப்லக்ஸ் உருவாகி இருக்கு. ஒரு காலகட்டத்திலே உயிரோட இருக்கப்போகிறோமா இல்லை சாகப்போகிறோமா என்பதற்கு இது வெகு முக்கியமான காரணியா இருந்தது. இப்போ நிலமை வெகுவாக மாறிட்டாலும் இது இன்னும் மாறலை. பல்லாயிரக்கணக்கான வருஷங்களோட பரிணாம வளர்ச்சில ஏற்பட்ட மரபணு மாற்றம் இது.

ஆனா ஏன் ஒத்தர் போலவே இன்னொருத்தர் இல்லை? இந்த ரிப்லெக்ஸ் எல்லாருக்குமே இருக்கணுமே? ஆனாலும்உன் வீட்டுல எரிகல் விழுந்து எரிஞ்சுபோச்சுன்னு சொன்னா, ”அப்படியா எரிகல் ஏதும் மிச்சம் இருக்கா, நான் பார்க்கணுமே!” ந்னு சொல்கிறாப்போல சிலரை பார்க்கிறோமே?

நம்ம கலாசாரத்துல சொல்லறது என்னன்னா இது வாசனைகள் சம்பந்தப்பட்ட சமாசாரம். வாசனைன்னா? நாத்தத்துக்கு எதிர்பதம்தானே? அது இல்லை.

ஒரு வேலை செய்கிறோம். முதலில் பயந்துண்டு கவனமா செய்வோம். அப்படியே செய்யச்செய்ய சுலபமா கவலை இல்லாமல் செய்வோம். இதன் பெயர் சம்ஸ்காரம். இன்னும் பழகப்பட இது இறுகி வாசனை ஆகிறது. இது ஜன்ம ஜன்மமாக நம்முடன் வரும். இதனால்தான் ஒருத்தர் போல ஒருத்தர் இல்லை. ஒரு செயலுக்கு ஒருவர் என்ன எதிர்வினை ஆற்றுவார் என்பது ஒரே மாதிரி இல்லை. அவர் போன ஜன்மங்களில எப்படி எப்படி மாறி கடைசியா இருந்தாரோ அப்படித்தான் இருப்பார். போன ஜன்மத்துல மூக்கு மேல கோபம்ன்னா இப்பவும் அப்படித்தான் இருக்கும். போன ஜன்மத்துல என்னத்தான் எரிச்சலூட்டினாலும் சிரிச்சுகிட்டு இருப்பார்ன்னா இப்பவும் அப்படித்தான் இருப்பார்! இதான் வாசனை. இதுக்கெல்லாம் செயலியான லிம்பிக் சிஸ்டத்துல ஸ்மெல் என்கிற வாசனையை அறிகிற ஆல்பாக்டரி பல்ப் இருக்கறதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொன்னா நம்பணும்!

அப்ப என்ன செய்யணும் என்கிறது சிம்பிள்தானே? ரிப்லக்ஸ்ல கோபம் பயம் எல்லாம் வந்துடும் சரி, ஆனா உடனே எதிர்வினையை செய்யாம புத்தியை களத்துக்கு கொண்டுவந்து செய்யணும். அதுக்கு கொஞ்சம் நேரம் தேவைப்படும் என்கிறதால அந்த அவகாசத்தை கொடுக்கணும்.

ஒத்தரோட பையன் ஸ்கூல்ல எப்பப்பாத்தாலும் அடி தடில இறங்கிட்டு இருந்தான். ஏண்டா ந்னு கேட்டா எதோ ஒரு காரணம் இருக்கவே இருந்தது. அப்பா சொன்னார் “இதோ பார்ரா, யாரும் எரிச்சல் மூட்டினா உடனடியா அடிதடில இறங்கிடாதே. பத்து வரைக்கும் எண்ணனும். அப்புறம்தான் எந்த செயலும் செய்யலாம்.”
அடுத்த நாளும் பையன் அடிதடில சட்டையை கிழிச்சுகிட்டு வந்தான்.
“ஏண்டா, பத்து வரைக்கும் எண்ணச்சொன்னேன் இல்லையா?”
ஆமாம்பா.”
பின்னே?”
அவன் என்னைவிட சீக்கிரம் எண்ணிட்டான்பா!”



No comments: