Pages

Thursday, September 24, 2015

மஹாளய சிராத்தம்-1


எல்லா பித்ருக்களும் யமதர்ம ராஜனால் பூலோகத்துக்கு ஒவ்வொரு வருடமும் பாத்ரபத க்ருஷ்ண பக்ஷத்தில் (ஆவணி மாத பௌர்ணமியை அடுத்த பிரதமை முதல்) பூமிக்கு  அனுப்பப்படுகின்றனர். ஆச்வயுஜ சுக்லபக் (புரட்டாசி அமாவாசையை அடுத்த) ப்ரதமை வரையான 16 நாட்கள் அவர்கள் புத்திரன் பெயரன் ஆகியோரால் கொடுக்கப்படும் அன்னம் நீர் ஆகியவற்றை ஏற்று ஆனந்திக்கின்றனர். இவை முக்கிய நாட்கள். கௌண காலமாக (தவறும் பக்ஷத்தில் அடுத்து செய்யும் காலமாக) விருச்சிக ராசியை சூரியன் அடையும் காலம் சொல்லப்படுகிறது (கார்திகை மாத பிறப்பு) இதுவே மஹாளய சிராத்த அனுஷ்டான காலம்.

இந்த காலத்தில் செய்யும் பித்ரு பூஜையானது யாகத்துக்கு சமமானது. இந்த கன்யா மாத்ததில் செய்யும் ஒரு நாள் சிராத்தத்தாலேயே பித்ருக்கள் ஒரு வருஷம் த்ருப்தி அடைகிறார்கள். ஆகவே 16 நாளும் செய்யக்கூடிய கர்மாவுக்கு பலன் அபரிமிதமாகும்.
இந்த 16 நாட்கள் முழுவதும் தினசரி பார்வண விதியாக (அதாவது ஹோமத்துடன்) சிராத்தம் செய்வது சிலாக்கியமாகும். அவ்வளவு நாட்கள் செய்ய சக்தியில்லை எனில் பஞ்சமி முதலோ அஷ்டமி முதலோ அதுவும் முடியாவிட்டால் தசமி முதலோ அமாவாசை வரை செய்யலாம். இதற்கும் சக்தி இல்லை எனில் விலக்கப்பட்ட நாள் இல்லாத ஒரு நாளிலாவது செய்ய வேண்டும்.

சிராத்தமாக செய்ய சக்தி இல்லாதவரே தர்ப்பணமாக செய்யலாம். அமாவாசை முடிய என்றும் பிரதமை முடிய என்று இரண்டு விதமாக முனிவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அவரவர் க்ருஹ்ய ஸூத்திரத்தை பார்த்து செய்ய வேண்டும்.

மேலே சொல்லப்பட்ட 16 நாட்களில் தின க்ஷயம் ஏற்பட்டால் 15 நாட்கள் மட்டுமே முக்கிய காலமாகும். ஸங்கல்ப சமயத்தில் உள்ள பக்ஷம் திதி இவற்றையே ஸங்கல்பத்துக்கு உபயோகிக்க வேண்டும். வழக்கமாக பஞ்சாங்கத்தில் சிராத்த திதி என்று பார்த்து செய்வது போலில்லை.

தெய்வாதீனமாக மேற்கூறிய முக்கிய காலத்தில் செய்ய முடியவில்லை எனில் கார்த்திகை பிறப்பு வரை கௌண காலம் இருப்பதால் கூடிய வரை சீக்கிரமாக செய்ய வேண்டும். அப்படியும் செய்யாவிட்டால் பித்ருக்கள் பெரு மூச்சு விட்டுக்கொண்டு வருத்தத்துடன் இவ்வுலகைவிட்டு கிளம்புகின்றனர். அப்படி அவர்கள் வருத்தப்பட்டாலே ஒருவன் பித்ரு சாபத்துக்கு உள்ளாகிறான். ’என் அப்பாவுக்கு என் மேல் மிகவும் பிரியம்; அவர் எனக்கு சாபம் கொடுக்க மாட்டார்’ என்று நினைக்க வேண்டாம். அவர்கள் தனியாக சாபம் என்று கொடுக்காவிட்டாலும் அவர்களுக்கு ஏற்படும் வருத்தமே போதும்; சாபம் ஏற்படும்.
இந்த சாபத்தால் ஐஸ்வர்யம், ஆயுசு, புத்திரன், பெயரன் ஆகியோருக்கும் குறைவு ஆகியன ஏற்படும்.

இதிஹாஸங்களில் இதை புகழ்ந்து சொல்லி இருக்கிறது. மாஹாளய பக்‌ஷத்தில் ஒவ்வொரு நாளும் செய்யும் சிராத்தம் கயா சிராத்தத்துக்கு சமம்; மஹா பரணியில் செய்யும் சிராத்தம் 5 மடங்கு பலன் தரும்; வ்யதீபாத புண்ய காலத்தில் செய்வது 10 மடங்கு பலன்; மத்யாஷ்டமிக்கு 20 மடங்கு; த்வாதசியில் 100 மடங்கு; அமாவாசை சிராத்தத்துக்கு ஆயிரம் மடங்கு பலன் என்று சொல்லி இருக்கிறது.

ஒவ்வொரு திதியிலும் கொடுக்கப்படும் சிராத்தத்துக்கு தனி பலன்கள் சொல்லப்பட்டுள்ளன.
ப்ரதமை – தன லாபம்
த்விதீயை – சந்ததி
த்ருதீயை – இஷ்டமான வரன்
சதுர்த்தி – சத்ருக்களை அகற்றும்
பஞ்சமி – ஐஸ்வர்யத்தை அடைவான்
ஷஷ்டி- புகழத்தகுந்தவன் ஆவான்.
ஸப்தமி – கூட்டத்துக்கு தலைவனாவான்
அஷ்டமி – சிறந்த புத்தியை அடைவான்
நவமி – அழகுள்ள கன்னிகையை அடைவான்
தசமி – எல்லா இஷ்டங்களையும் அடைவான்
ஏகாதசி – எல்லா வேதங்களையும் அடைவான்
த்வாதசி – ஸ்வர்ண லாபம்
த்ரயோதசி – ப்ரஜை, மேதா சக்தி, தேஹ புஷ்டி, பசுக்கள், ஸ்வதந்திர தன்மை, சிறந்த வ்ருத்தி (தொழில்) தீர்க்கமான ஆயுஸ், ஐஸ்வர்யம் – இப்படி சொல்லப்பட்ட பலன்கள் அனைத்தும் நிச்சயமாக கிடைக்கும்.

சதுர்தசி சிராத்தம் சிறு வயதில் ஆயுதத்தால் அடி பட்டு இறந்த பித்ருக்களுக்கு சிறந்ததாகும்.

அமாவாசை – இஷ்டங்கள் எல்லாவற்றையும் அடைவான்.

சாதாரணமாக செய்யப்படும் சிராத்தங்களுக்கும் இதற்கும் நிறைய வேறு பாடுகள் உண்டு....

(தொடரும்)

No comments: