Pages

Tuesday, September 9, 2014

கடவுள் - 2


கடவுள் இருக்கார். நம்மோட இன்ப துன்பங்களுக்கு எல்லாம் நாம் செய்த செயல்கள்தான் காரணம். அதுக்கு தகுந்த விளைவை அனுபவிப்போம். இந்த விளைவுல குறுக்கிட கடவுளுக்குக்கூட அதிகாரம் கிடையாது.

கடவுள் இருக்கார். நம்மோட இன்ப துன்பங்களுக்கு எல்லாம் நாம் செய்த செயல்கள்தான் காரணம். அதுக்கு தகுந்த விளைவை அனுபவிப்போம். இந்த விளைவுல குறுக்கிட கடவுளுக்குக்கூட அதிகாரம் கிடையாதுன்னு சொல்ல முடியாது. ஆனா அவன் வைத்த சட்டத்தை அவனே மீறலாமா? இருந்தாலும் சட்டத்தை இயற்றியவர்களே கொஞ்சம் கருணை காட்டி தண்டனையை குறைக்க வழி சொல்லி இருப்பது போல, நம் தவறுகளுக்கு நாம் பச்சாதாபப்பட்டு மன்னிப்பு கேட்டுக்கொண்டால் தண்டனையை கடவுள் குறைப்பார்.

கடவுள் இருக்கார், நாம செய்யறது தப்புன்னா அவருக்கு ஒரு பூஜை ஹோமம்ன்னு பண்ணி கொஞ்சம் காசு உண்டியல்ல போட்டா போதும். எல்லாம் சரியாயிடும்.

கடவுள் இருக்கார். நம்ம எதிரிய எல்லாம் ஒழிச்சு கட்டணும்ன்னா அவருக்கு ஒரு பூஜை, பலி, ஹோமம்ன்னு பண்ணி கொஞ்சம் காசு உண்டியல்ல போட்டா போதும். எல்லாம் நடந்துடும்.

கடவுள் இருக்கார். ம்ம்ம்ம் கடவுள்கள் இருக்காங்க. சிலது சின்ன கடவுள்; சிலது பெரிய கடவுள். நம்ம எதிரி சின்ன கடவுள பிடிச்சுக்கிட்டான்னா நாம் பெரிய கடவுளை பிடிச்சுக்கணும். ம்ம்ம்ம்ம் …. அவன் முதல்ல பெரிய கடவுளை பிடிச்சுட்டான்னா என்ன செய்யறது? நாமும் அதே கடவுளை பிடிச்சுகிட்டு அவனை விட பெரிய பூஜை பலி போடறது எல்லாம் செய்யணும்! அப்ப பெரிய கடவுள் நம்ம பக்கம்தான்!

எனக்குத் தெரிஞ்ச மந்திரவாதி ஒத்தர் இருக்காரு. அவர் பூச போட்டா அவ்ளோதான்! கடவுளாளேயும் மாத்த முடியாது!

கடவுள் இருக்கார் அவருக்கு அப்பப்ப பூச போடணும்; பலி கொடுக்கணும். இல்லைன்னா அவருக்கு கோவம் வந்து நமக்கு கெடுதல் பண்ணிடுவார்!

கடவுள் எல்லா இடத்திலேயும் இருக்கார். அவரை இந்த கோவில்ல இருக்கார், இந்த படத்துல இருக்கார்ன்னு கட்டிப்போடறது அநியாயம்! அப்படி கும்புடுறது முட்டாள்தனம்!

கடவுள் எல்லா இடத்திலேயும் இருக்கார். அவரை இந்த கோவில்ல இருக்கார், இந்த படத்துல இருக்கார்ன்னு கட்டிப்போடறது அநியாயம்!” ஏன்பா எல்லா இடத்திலேயும் இருக்கிற கடவுள் அந்த கோவில்லேயும் படத்திலேயும் இல்லாம போயிடுவாரா? அப்படி அவரை கும்புடுறது எப்படி தப்பாகும்?

கடவுள் மனசிலேதான் இருக்கார். ஒரு பொருள்ள அவர் இருக்கார்ன்னு நினைச்சா அதுல அவர் இருப்பார். இல்லைன்னு நினைச்சா இல்லைதான்!

நான் ப்ரம்மம் என்பது சத்தியம். ஆனால் அந்த ப்ரம்மத்துக்கான ஒரு அறிகுறியும் நம்மிடம் இல்லையேன்னா, அப்படி இருக்க பெரிய தடை நான் என்கிற அகங்காரம். இந்த நான்’ போயிடுத்துன்னா பின்னே ப்ரம்மம் ஒளிவிட்டு பிரகாசிக்கும்! ஆனா இந்த ‘நான்’ போகறது மிகவும் கடினம்!

கடவுள் யார்ன்னு நாந்தான் காட்டுவேன். நான் கட்டறவர்தான் கடவுள். நான் சொல்கிறதுதான் வேதம். மத்தவங்க எல்லாரும் சொல்கிறது தப்பு. அவங்க எல்லாம் ஏமாத்துறவங்க!

நாந்தான் கடவுள். என்னை எல்லாரும் வணங்குங்க!

நாந்தான் கடவுள். என்னை எல்லாரும் வணங்குங்க! அப்படி வணங்கினா உங்களுக்கு நல்லது செய்வேன்!

நாந்தான் கடவுள். என்னை எல்லாரும் வணங்குங்க! இல்லைன்னா தொலைச்சுடுவேன்!

No comments: