Pages

Thursday, May 9, 2013

யக்ஷப்ப்ரச்னம் - 3

 

10. கே: ப்ராம்ஹணர்கள் மனிதர்கள் என்று ஏன் கருதப்படுகிறார்கள்?
: உடலில் நான் என்ற எண்ணங்கொண்டு அதனால் ஜனனத்தையும் மரணத்தையும் அடைவதால்.


11. கே: துஷ்ட மனிதர்களுக்கும் இவர்களுக்கும் பொதுவாக இருப்பது எது?
: தெய்வத்தையும், பெரியோர்களையும் நிந்தனை செய்தல்; துராசாரம். இவை இரண்டும் இருவர்களுக்கும் பொதுவானவை.
ஆன்மீக சிந்தனை: தேஹ ஆத்ம பாவம், (உடலே நான் - ஆத்மா- என நினைத்தல்) தெய்வநிந்தை, பெரியோர்களை நிந்தித்தல், துராசாரம் முதலியவற்றை அனைவரும் ஒழிக்க வேண்டும்.

12. கே: க்ஷத்திரியர்கள் எதனால் தேவர்கள், அதாவது சுவர்க்கத்துக்கு செல்ல தகுதி உடையவர்கள் ஆகிறார்கள்?
: வில்வித்தையை நன்கு அப்யஸித்து அதன் மூலம் பிரஜைகளை இரக்ஷித்தலால்.

13.கே: ஸத் புருஷர்களுக்கும் இவர்களுக்கும் பொதுவான தர்மம் யாது?
: யக்ஞங்களை அனுஷ்டித்தல்.

14. கே: க்ஷத்திரியர்கள் மனிதர்கள் என்று ஏன் கருதப்படுகிறார்கள்?
: பயத்தால். (வில்வித்தை முதலியவற்றைக்கற்று பிரஜைகளை நன்கு பரிபாலித்து வந்தால் சுவர்கத்தை அடைகிறான். எதிரிகளைக்கண்டு பயந்து குடிகளை சரிவர இரக்ஷிக்கவில்லை எனில் ஜனன மரணங்களை அடைந்து கொண்டே இருக்கிறான் என்பது கருத்து.)

15. கே: துஷ்டர்களுக்கும் இவர்களுக்கும் சமமான தர்மம் யாது?
: கஷ்டப்படும் பிரஜைகளை இரக்ஷிக்காமல் த்யாகம் செய்தலே.

16 .கே: யக்ஞத்தில் உபயோகப்படும் "ஸாம" என்பது என்ன?
: மனது. (யாகத்திற்கு ஸாம வேதமும் யஜுர் வேதமும் உப யோகப்படுவது போல் ஞான யக்ஞத்துக்கு பிராணன், மனஸ் இவ்விரண்டும் சிறந்த சாதனங்களாம்)

17. கே: எது யக்ஞத்தை நிறைவேற்றுகிறது?
: ரிக்

18. கே: எது இல்லாமல் யக்ஞத்தை அனுஷ்டிக்க முடியாது?
: ரிக் இல்லாமல் யக்ஞத்தை அனுஷ்டிக்க முடியாது

ரிக் என்பது இங்கு வேத வாக்கு. ஆத்ம ஞானமாகின்ற யக்ஞத்தை வேத வாக்கினால்தான் நிறைவேற்ற முடியும். பிராணன், மனஸ், இவற்றைவிட வேத வாக்கு இந்த யக்ஞத்துக்கு மிக அவசியம். ஆதலால்தான் "ஔபனிஷத3ம் புருஷம் ப்ருச்சா2மி" என்று உபநிஷத் கூறுகிறது.

19. கே: தேவர்களைக்குறித்து செய்யும் யாகத்துக்கு சிறந்த பலன் யாது?
: மழை. (மழை எல்லா உலகத்துக்கும் திருப்தி அளிக்கிறபடியால் அதுவே சிறந்த பயனாகும்.)

20. கே: பித்ருக்களை குறித்து செய்யப்படும் தர்ப்பணத்துக்கு முக்கிய பயன் யாது?
: நல்ல புத்திரன் தனம் முதலியவை.
ஆயு: ப்ரஜாம் த4நம் வித்3யாம் ஸவர்க்க3ம் மோக்ஷம் ஸுகாநிச |
ப்ரயச்ச2ந்து ததா2 ராஜ்யம் ப்ரீதாஸ்துப்4யம் பிதாமஹா: ||
ஆயுள், பிரஜை, தனம், வித்யை, சுவர்க்கம், மோக்ஷம், சுகம், ராஜ்யம் இவை எல்லாவற்றையும் உங்கள் தர்ப்பணத்தால் த்ருப்தியடைந்த பித்ருக்கள் உங்களுக்கு அளிக்கட்டும் எனக்கூறபட்டிருக்கிறது. இவையெல்லாம் இங்கு பீ3ஜம் என்ற சொல்லால் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.

No comments: