Pages

Wednesday, May 29, 2013

ரமணர் - ஞானிகள் போக்கு....

 
மல்லிகார்ஜுன ராவ் என்று ஒருவர் ஆச்ரமத்துக்கு வந்தார். அவர் அங்கே அடிக்கடி வந்து போகிறவரே. அவருக்கு ஐந்து பெண் குழந்தைகள். நடுவில் 5 ஆண் குழந்தைகள் பிறந்து இறந்தன. ஆறாவது ஆண் குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில் அதற்கு அன்ன ப்ராசனம் செய்ய எண்ணி அதை பகவான் கையாலேயே செய்விக்க வேண்டும் என்று ஆவலாய் திருவண்ணாமலை வந்தனர். அந்த முஹூர்த்தம் நாளை மறு நாள் என்று இருக்கும் போது குழந்தை இறந்துவிட்டது. பின் ஊருக்கு போக எண்ணி பகவானிடம் விடை பெற்றுப்போக வந்து இருந்தனர். அவர்கள் துக்கத்தை தணிப்பதற்கு கேட்டது போலவே ஒரு பக்தர் பகவானிடம் கேட்டார்...

"ஸ்வாமி ப்ராணாயாமம் போன்ற சாதனைகளால் சரீரத்தை நீண்ட காலம் இருக்கச்செய்யலாம் என்று அப்படிப்பட்ட ஞானிகள் இருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்களே, அது உண்மைதானா? ”

அதற்கு பகவான் சற்று நிதானித்து, “ஆமாம். செய்கிறார்கள். ஆனால் ரொம்ப காலம் ஜீவித்து இருந்தால் மாத்திரம் ஒருவர் ஞானி ஆகிவிடுவாரா? அல்லது சொற்ப காலம் இருந்தவர்கள் ஞானி ஆகாமல் இருப்பார்களா? சங்கரர் 32 வருஷகாலம்தான் இருந்தார். மாணிக்க வாசகர் 32. சுந்தரர் 18. சம்பந்தர் இன்னும் சீக்கிரமாகவே, 16 வயசிலேயே சரீர த்யாகம் செய்துவிட்டார். அவர்கள் எல்லாம் ஞானிகள் இல்லையா என்ன?”

"ஞானிகளுக்கு உண்மையில் இந்த சரீரத்தின் மீது ப்ரியமே இருக்காது. ஆனந்த மயமான அவர்களுக்கு இந்த உடல் ஒரு வியாதியாகவே தோன்றும். இது இருப்பதால்தான் பல் துலக்குவது, மல ஜலம் கழிப்பது, ஸ்னானம் செய்வது, ஆகாரம் எடுத்துக்கொள்வது போன்று பல தொல்லைகள். ஒரு சிரங்கு வந்தால் அதை அலம்பி மருந்து போடாமல் இருந்து விட முடிகிறதா? அதைப்போலவே இந்த சரீரத்தை கவனிக்காமல் போனால் அது கேடடைந்து விடுகிறது. ஞானியானவன் கூலிக்கு சுமை தூக்குவது போல இந்த தேகத்தையும் சுமக்கிறான். போக வேண்டிய இடம் எப்படா வருமென்று பார்த்து கொண்டு இருப்பானே தவிர பிராணாயாமாதிகளும் காயகல்பங்களும் செய்து இந்த வியாதியை வெகு நாட்கள் தங்க வைக்க வேண்டும் என்று அவன் நினைப்பானா? அதெல்லாம் சித்தர்களின் வழிகள். நான் மலை மீது இருக்கும் போது சில சித்தர்கள் இருந்தார்கள். அவர்களை பார்க்க யாரேனும் வந்தால் , உட்காரச்சொல்லி 'உங்கள் ஊர் எது அப்பனே' என்பார்கள். இன்ன ஊர் என்று பதில் வரும். 'உங்கள் தாத்தா பேர் என்ன , கொள்ளு தாத்தா பேர் என்ன' என்று கேட்டு தெரிந்து கொண்டு ', அதுதான். அதேதான். உன் தாத்தாவின் தாத்தா இவ்வளவு சின்ன பையனாக இருந்த போது நான் இங்கே வந்தேன்!' என்பார்கள். வந்தவர்களும் 'அடேயப்பா, இவ்வளவு காலம் உயிரோடு இருக்கிறார்களே, எவ்வளவு பெரிய மஹான்கள்!' என்று நமஸ்கரித்து தக்ஷிணை கொடுத்து போவார்கள். இதெல்லாம் உலகத்தை பிரமிக்க வைக்கத்தானே தவிர அதனால் ஞானிகள் ஆகிவிடுவார்களா?”

"ராமர் தீர்த்த யாத்திரை செய்து திரும்பியதும் இந்த உலகமெல்லாம் துக்கமானதுதான், சரீர காரணமே துக்கம் என்று விரக்தியுடன் ஆகாரம் ஜலம் எல்லாவற்றையுமே பிறரிச்சைக்கு ஏற்று, ஜடம் போல ஆகிவிட்டாராம். விச்வாமித்திரர் யாக ரக்ஷணைக்காக ராமரை அனுப்பும் படி தசரதரை கேட்டதற்கு 'அவன் ஏதோ பித்து பிடித்தாற்போல் இருக்கிறான் ஸ்வாமி' என்று சொல்லி அந்த பித்தின் குணங்களை விவரித்தாராம். விச்வாமித்திரர் மகிழ்ந்துபோய் 'சந்தோஷமாக இருக்கிறது. இந்த பித்து எல்லோருக்கும் பிடிக்குமா? அவனை சபைக்கு வரச்சொல்!' என்றார். ராமர் வந்து எல்லோரையும் நமஸ்கரித்து உட்கார்ந்தார். விச்வாமித்திரர் ராமரைப்பார்த்து விசனத்தின் காரணத்தை கேட்டு தெரிந்து கொண்டு வஸிஷ்டரிடம் 'என்னய்யா! நம்மிருவருக்கும் ப்ரம்ஹா உபதேசித்த ஆத்ம தத்துவத்தை ராமனுக்கும் உபதேசித்து அவன் கவலையை போக்கடியும்' என்று கேட்டுக்கொண்டார். வஸிஷ்டரும் உபதேசம் செய்தார். அதுதான் வாஸிஷ்டம் என்பது. அதை கேட்க விண்வெளியிலிருந்து சித்தர் கூட்டம் இறங்கி வந்தது. 'இந்த ராமன் சிறு வயதிலேயே இவ்வளவு ஞானம் பெற்றுவிட்டானே! என்ன ஆச்சரியம்!' என்று புகழ்ந்து, நாம் எத்தனை நாள் வாழ்ந்து என்ன லாபம்' என்று நினைத்துக்கொண்டார்களாம்.” என்றார் பகவான்.

"நிஜம்தான். சிலர் நான் 80 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டேன். இனி என்ன வேண்டும் என்பார்கள். அது ஒரு பெருமை" என்றார்.

பகவான் புன் சிரிப்புடன் "ஆமாம். அது ஒரு கர்வம்தான். அதற்கு ஒரு கதை இருக்கிறது” என்றார்.....

(இந்த பதிவும் ரமணர் குறித்த இன்னும் பல பதிவுகளும் சூரி நாகம்மா எழுதிய ரமணாஸ்ரமத்திலிருந்து கடிதங்கள் என்னும் புத்தகத்தை மூலமாக கொண்டவை.)

No comments: