Pages

Wednesday, April 22, 2020

#கொரோனாவும்_கோமு_பாட்டியின்_ஆச்சாரமும்- 11




 சர்ரென்று மாடிப்படி கைப்பிடி மேல் சறுக்கியபடியே வந்து கீழே குதித்தான் கண்ணன்.
 உள்ளூர அவன் செய்கையை ரசித்து கொண்டு "என்னடா இது? என்ன சொன்னாலும் கேக்க மாட்டியே?" என்று கண்டித்தாள் பாட்டி.
இடி இடி என்று சிரித்தான் கண்ணன்.
ஏன் பாட்டி என்ன ஆச்சு?
ஒன்னும் இல்லடா. இப்போ அந்த கைப்பிடி மேல இருந்த தூசி அத்தனையும் ஒன் ட்ராயர்ல்ல" என்றாள் பாட்டி.
 பரவால்ல பாட்டி என்று சொன்னபடியே புத்தக அலமாரியை சுத்தம் பண்ணிக் கொண்டிருந்த அப்பாவுக்கு நானும் உதவி பண்ணுகிறேன் என்று பேர் பண்ண போனான் பேரன்.
 "ஆமாடா இந்த வைரஸ் களேபரம் வந்தாலும் வந்துதுஇந்த அலமாரிகளுக்கு நல்ல காலம் பொறந்துடுத்து. இல்லாட்டா எவ்வளவுதான் சொன்னாலும் இதெல்லாம் தொட மாட்டயே?" என்றாள் பாட்டி.
 கொஞ்ச நேரத்தில்  கண்ணனின் கையிலிருந்த  நாலைந்து புத்தகங்கள் கைநழுவி கீழே விழுந்தன.
 அதிலிருந்து தூசி பறக்க ஹச்சென்று தும்மினான் கண்ணன்
 "டேய் எல்லார் மேலேயும் படறா மாதிரி தும்மக் கூடாது. துண்டு கர்சிப் எதுவும் இல்லைன்னா கையால பொத்திண்டு தும்மணம்" என்றாள் பாட்டி.
 "நான் என்ன பண்ணட்டும் பாட்டி அது சட்டுனு வந்துடுத்து" என்றான் கண்ணன்
 "அது தெரியாதா ஒனக்கு?" என்று சொல்லியபடியே உள்ளிருந்து வந்தாள் சித்ரா .
"தோ பார், இப்படி மூக்குத் தண்டு கீழ மேலுதட்ட பலமா எந்த வெரலாவது வெச்சு பலமா அழுத்தணும்" என்று செய்து காட்டினாள்.
 அப்ப தும்மல் வராதா அம்மா?
 "சட்டுனு அடங்கிடும் டா. அடுத்த தரம் செஞ்சு பாரு" என்றாள் சித்ரா.
 யாரும் கவனிக்காத போது ஒரு கர்சிப் மூலையை சுருட்டி மூக்குக்குள் விட்டு தும்மல் வர வைத்து அம்மா சொன்னதை சோதித்துப் பார்த்தால் கண்ணன். அட ஆமா! நின்னு போச்சு!
 ஆனால் இந்தத் தூசி தன் வேலையைக் காட்டிவிட்டது. சாயங்காலம் கண்ணன் மூக்கை உறிஞ்சிக் கொண்டிருந்தான்.
 "மூக்க உறிஞ்சாதே!" என்றாள் பாட்டி
 ன் பாட்டி? சளி வரதே, என்ன பண்ணட்டும்?
 அதை சிந்தணும்டா. சிந்தரா மாதிரி இடத்தில இல்லைன்னா கர்சிப் மாதிரி ஏதாவது வெச்சிண்டு அதை தொடச்சுக்கணும். அத உள்ளே இழுக்கக் கூடாது.
ஏன் பாட்டி இழுத்தா என்ன ஆயிடும்?
 நீ இழுத்தா இப்போ மூக்குல இருக்கிற பிரச்சனை ரொம்ப சுலபமா தொண்டைக்கு போயிடும். நான் சொன்ன மாதிரி செஞ்சா சில சமயம் பிரச்சனை தொண்டைக்குப் போகாமலே தப்பிச்சுக்கலாம்.
 ன் பாட்டி, திடீர்னு சளி வெளி வரது. கர்சிப் துண்டு எதுவும் பக்கத்துல இல்ல. சிந்தவும் முடியாது. என்ன பண்ணலாம்?
 "வேற வழி இல்ல டா, முழுங்க வேண்டியதுதான்எப்படியானாலும் அதை மூக்குள்ள இழுத்து காறித் துப்பக் கூடாது" என்றாள் பாட்டி
பாட்டி சரி வயத்துக்கு போனா அது ஒன்னும் பண்ணாதா?
 வயத்துல ஆசிட் இருக்குடா. அதனால அது சளியை கரச்சுடும். அதுல ஒரு வேளை ஏதாவது பாக்டீரியா எல்லாம் இருந்தா அதையும் ஆசிட் கொன்னுடும்" என்று விளக்கம் கொடுத்தாள் சித்ரா "ஓஹோ அப்படியா? சரி மா இனிமே அப்படியே பண்றேன் ஒரு கர்சிப் கொடு" என்று கேட்டான் கண்ணன்.


No comments: