Pages

Tuesday, April 14, 2020

#கொரோனாவும்_கோமு_பாட்டியின்_ஆச்சாரமும்- 4





#கொரோனாவும்_கோமு_பாட்டியின்_ஆச்சாரமும்- 4

வாசலில் கீரைக்கார கிழவி கீரைக் கூடையை இறக்கி வைத்திருந்தாள். கோமு பாட்டி ஆறு அடி தூரத்தில் நின்ற படியே கீரையை ஆராய்ந்து கொண்டு இருந்தாள். ம்ம்ம் பரவாயில்ல 2 கட்டு வை என்றாள். கீரைக்காரி கொண்டு வந்து படிக்கட்டில் கூடையில் வைத்தாள். அதற்குள் பாட்டி உள் வாசலுக்கு பின் வாங்கிவிட்டார். அம்மாடி காசு கொண்டுவா, 20 ரூபா என்றாள் உள்ளே பார்த்து. 50 ஆ தான் இருக்கு என்றபடி அம்மா கொண்டு வந்து படியில் வைத்தாள்.
இதற்குள் கேட்கிட்டே போய் விட்ட கீரைக்காரி சுருக்குப்பையில் இருந்து 30 ரூபாயை எடுத்து திருப்பி படியில் கொண்டு வந்து வைத்தாள். 50 ரூபாயை எடுத்துக்கொண்டாள்.
அத கூடையிலேயே போடு என்றாள் பாட்டி.

கீரைக்காரி கேட்டை தாண்டியதும் போய் கூடையோடு குழாயடியில் தண்ணீர் ஓடவிட்டு அலம்பினாள். நீர் வடிய அங்கேயே வைத்துவிட்டு திரும்பினாள்.
இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த பேரனுக்கு இது தமாஷாக இருந்தது!
என்ன பாட்டி இது நீ முன்னால போறதும் பின்னால வரதும் கீரக்காரியும் அதே மாதிரி நீ முன்னால் போறப்ப அவ பின்னால போறதும் நீ பின்னால போறப்ப அவ முன்னால வரதும் தமாஷா இருக்கு. கபடி ஆடறா மாதிரி இருக்கே!
ஆமாண்டா! தமாஷாத்தான் இருக்கும். ஆனா இதெல்லாம் மளையாளத்துல சகஜம் தெரியுமோ என்றாள் பாட்டி.
கீரைக்கூடையை எடுத்துக்கொண்டே " ஆமா, நேத்து கூட ட்விட்டர்ல விடியோ பாத்தேன். கேரளால தெருல படுத்து இருக்கற வீடில்லாத ஆசாமிக்கு போலீஸ்காரா சாப்பாடும் தண்ணியும் கொண்டுவரா. அவன் கிட்ட வராதேங்கறா மாதிரி அலற்றான். கொஞ்சம் முன்னால வந்து மண்ணுல ஒரு வட்டம் போட்டுட்டு பின்னால் போறான். அந்த வட்டத்துல சாப்பாட்ட வெச்சுட்டு நீ நகருங்கறான். போலீஸும் அப்படி செய்யறாங்க. இந்த பிச்சக்காரனனுக்கு கூட சோசியல் டிஸ்டன்சிங் தெரியறது. மத்தவங்க பல பேருக்கு தெரியலையேன்னு சிலர் கமெண்ட் எழுதி இருந்தாங்க!" என்றாள் அம்மா.
ஆமா. அப்படி பல வருஷம் பழகி இருக்காங்க. அதான் சுலபமா வரது. போஸ்ட் ஆபீஸ் போனா ", போஸ்ட் மாஸ்டர் ரெண்டு கார்ட் வேணும்ன்னு வெளியே நின்னே கத்துவாங்க. அவரும் எடுத்துண்டு வருவார். நீ படியில வெச்ச காச எடுத்துண்டு கார்ட வெச்சுட்டு போவார். இப்படி இன்னும் விஸ்தரமா கதை கேள்விப்பட்டு இருக்கேன் என்றாள் பாட்டி.
ஏன் பாட்டி என்று கேட்டான் பேரம்.
அவா ரொம்ப தீட்டு பாப்பா என்றாள் பாட்டி.
தீட்டுன்னா என்ன பாட்டி என்று கேட்டான் பேரன்.
அப்பறம் விரிவா சொல்றேன் என்றாள் பாட்டி.


No comments: