Pages

Saturday, April 18, 2020

#கொரோனாவும்_கோமு_பாட்டியின்_ஆச்சாரமும்- 8






 வியாபாரத்தை முடித்துக் கொண்டு கிளம்பினாள் காய்கறிக்கார கிழவி. "அம்மாடா! இப்பவே என்ன வெயில்! மண்டைய பொளக்குது"  என்றார்.
"கொஞ்சம் மோர் குடித்து விட்டுப் போயேன்" என்றார் பாட்டி.
"கொடுமா மகராசியா இருப்பே" என்றாள் கிழவி.
 "ஆமாம் வரவா போறவா எல்லாருக்கும்... " என்று பாட்டி காதுக்கு மட்டும் எட்டும்படி முணுமுணுத்தபடியே மோர் எடுத்து வர உள்ளே போனார் சித்ரா.
 "புண்ணியம்டீ! இல்லைன்னு சொல்லாதே!" என்றாள் பாட்டி.
 கொண்டுவந்த வைத்த மோரை எடுத்து நடுநடுங்கும் கைகளால் எடுத்து குடித்துவிட்டு டம்ளரை கீழே வைத்தாள் கிழவி. "மகராசியா இரு அம்மா!" என்று வாழ்த்தியபடியே கிளம்பினாள்
சித்ரா ஒரு சொம்பு தண்ணீரை கொண்டு வந்து அந்த டம்ளர் மீது ஊற்றினார். பிறகு கையால் எடுத்து மேலும் தண்ணீரை ஊற்றி நன்றாக கழுவி உள்ளே எடுத்துக்கொண்டு போனார். போகிற போக்கில் தாத்தா காபி குடித்து விட்டு வைத்திருந்த டம்ளரையும் எடுத்துக்கொண்டு போனார்.
 இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பேரன் பாட்டியிடம் கேட்டான்:
 "ன் பாட்டி, அந்த காய்கறி கிழவி வெச்சுட்டுப் போன டம்ளர தண்ணிய ஊத்திட்டு எடுத்தா. தாத்தா காபி குடிச்சுட்டு வெச்ச டம்ளரை அப்படியே எடுத்துண்டு போறா. ஏன் அப்படி வித்யாசம் பாட்டி? "
 பாட்டி சொன்னாள் "அப்பிடிதான்டா , தாத்தா நம்மாத்து மனுஷா. அதனால அப்படியே எடுத்து போலாம். இந்த கிழவி வெளிலேந்து வரணும். அதனால தண்ணிய கொட்டி எடுக்கணும்."
 "புரியலை பாட்டி" என்றான் பேரன்.
 சித்ரா சொன்னார் "இதோ பாருடா நாம ஆறு பேர் ஆத்துல இருக்கோம். அதுல ஒருத்தருக்கு ஒருத்தர் பாக்டீரியாவோ வைரஸோ தொத்திக்கிறது தடுக்கவே முடியாதுன்னே சொல்லலாம். ரொம்ப கஷ்டம். ஒருத்தர்கிட்டேந்து இன்னொருத்தருக்கு ரொம்ப சுலபமா வந்துடும்."
 ஆமாம்மா. அக்காவுக்கு நாலு மாசம் முன்னாடி ஜலதோஷம் வந்த பிறகு எனக்கும் வந்துடுத்தே.
 அதுதான்டா. ரொம்ப சுலபமா வரும். ஆனா இந்த கிழவி வெளியிலிருந்து வரா. இந்த கிழவிகிட்டே இருந்து ஏதாவது இன்பெக்ஷன் வரதா இருந்தா நம்மால தடுக்க முடியும். அதுக்கு இந்த மாதிரி அவா பயன்படுத்தின டம்ளரை கழுவி எடுத்துண்டு போனா சரியா இருக்கும்.
 சரிதான்ம்மா. நேத்து பாட்டி அந்த முனிசிபல் ஆபீஸர் கிட்ட இததானே சொல்லிண்டு இருந்தா? சரிதான்.
 உள்ளே போன பேரன் நேரடியாக தாத்தாவிடம் போனான். "தாத்தா! செய்யற காரியத்துக்காக தான் ஆச்சாரம் அப்படின்னு சொல்லிட்டு இருந்தியே... அது எனக்கு அவ்ளோ சரியா புரியலை திருப்பி சொல்லு."
 பாருடா கண்ணா தாத்தா தினசரி காத்தாலயும் சாயங்காலமும் ஔபாசனம் செய்யறேன்.
 ஆமாம் தாத்தா பூஜை ரூம் பக்கத்துல இருக்கிற சின்ன ரூம்ல எப்பவும் அக்னி வைச்சு இருக்கியே. அதுலதானே அரிசிய வெச்சு ஹோமம் பண்ணுவே?
 அதேதான்டா. சரி. அது என்னோட அக்னி தானே?
 ஆமா தாத்தா.
 என்னோட அக்னியாய் இருந்தாலும் சாயங்காலம் ஹோமம் செய்ய நான் அப்படியேவா போறேன்? குளிச்சுட்டு தானே போறேன்?
 "ம்ம்ம்ம்ம் .... சரிதான் தாத்தா. உன்னோட அக்னி. அதனால உனக்கு ரைட் இருக்கு. இருந்தாலும் நேரா குளிக்காம போய் ஹோமம் பண்ணறதில்ல. குளிச்சிட்டு தான் போறே. செய்யப்போற காரியத்துக்குத்தான் இப்படி. இல்லியா தாத்தா?" என்றான் கண்ணன்.
பேரனுக்கு பதில் சொன்ன திருப்தியுடன் பேப்பரை பிரித்தார் சாஸ்திரிகள்.






No comments: